மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது?: தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகபட்டினத்தை சேர்ந்த கடலோர கிராமங்களான உடன்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் இயற்கை நீர்வள ஆதாரங்கள் தினமும் அழிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சவுடு மணல் எடுப்பதாக அனுமதி பெற்று அதிகளவிலான மணல்கள் எடுக்கின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை சவுடு மணல் எடுக்க அனுமதிக்ககூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், இதுபோன்று அனுமதி வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்டவிரோத மணல்கடத்தலை தடுக்க கோரி தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்த வண்ணம் உள்ளன என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில், தமிழக அரசின் தலைமை செயலாளர், தொழில்துறை முதன்மை செயலாளர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் உடன்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் எடுப்பது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? அந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பாகவும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: