கோவை: அங்கொட லொக்கா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு குற்ற செயல்களின் தலைவனாகவும், போதைப்பொருள் கடத்தல் மன்னனாகவும் இருந்தவர் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா. இதனையடுத்து இவரை இலங்கை போலீஸ் தீவிரமாக தேடி வந்தது. இந்த நிலையில் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோவையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதன் பின்பு அங்கொட லொக்கா கடந்த மாதம் கோவையில் இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கொலையில் மர்மங்கள் இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விசாரணை மேற்கொண்டதில் ஏற்கனவே அங்கொட லொக்காவின் போஸ்ட்மாடம் ரிப்போர்ட்டின்படி அவரது கை மற்றும் கால் விறல் நகங்கள் நீல நிறத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து விசாரணையானது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் அங்கொட லொக்காவின் காதலி அமானிதான்ஜி மற்றும் அங்கொட லொக்காவின் பெயரை மாற்றி போலி ஆதார் கார்டை உருவாக்கிய மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்காக, கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை விசாரணை நடத்த 5 நாட்கள் கோரப்பட்டுள்ள நிலையில், தற்போது நீதிமன்றம் 3 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதற்காக மதுரை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.