சென்னை : EIA 2020-யை எதிர்த்து நடிகர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 9-ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்றார் மகேஷ் பாபு. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும்.
பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றை நட்ட வீடியோவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும் என்று தெரிவித்தார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபுவின் இந்தச் சவாலை விஜய் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு உண்டானது. நேற்று மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றை நட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் விஜய். அதோடு இது உங்களுக்காக மகேஷ்பாபு அவர்களே. பசுமையான இந்தியாவும், நல் ஆரோக்கியமும் கிடைக்க என் வாழ்த்துகள். நன்றி. பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்.
இந்த நிலையில், விஜய்யின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் விசிக துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், “மரம் நடுவது நற்செயல். அதைச் செய்வது சிறப்பு. அதே வேளை, இயற்கையாக வளர்ந்த வனங்களையும், நாம் நடும் மரங்களையும் பாதுகாப்பது முக்கியம். வளர்ச்சியின் பெயரால் வளங்களை அழிக்க வகை செய்யும் EIA2020-யை எதிர்த்து விஜய் குரல் எழுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.EIA 2020 என்ற புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில் உள்ள சாதக, பாதகங்களை மக்கள் புரிந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.