அங்கொட லொக்காவின் கூட்டாளி 'சோல்டா'இலங்கையில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!!

கொழும்பு: இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா தொடர்பான செய்திகள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், அங்கொட லொக்காவின் கூட்டாளி சோல்டாவை இலங்கையில் காவல் துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். கையெறி குண்டுகளை வீசி அவர் தாக்குதல்கள் நடத்தியதால் அங்கொட லொக்காவின் கூட்டாளி சோல்டா என்ற அசித ஹேமதிலக-வை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

தமிழகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கொட லொக்காவின் மரணம் குறித்த விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளனர். சர்வதேச விசாரணை அமைப்பும் அங்கொட லொக்கா மரணம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது. சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் தீவிர விசாரணை நடைபெறக்கூடிய சூழலில் தற்போது மற்றும் ஒரு செய்தியாக அங்கொட லொக்காவின் கூட்டாளி சோல்டாவை இலங்கை காவல் துறையினர் என்கவுண்டர் செய்திருக்கின்றனர்.

அங்கொடா லொக்காவின் தொழில் கூட்டாளியாக இலங்கையில் செயல்பட்டு வந்தவர் சோல்டா. இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு அழகு நிலையத்தில் பெண்ணை சுட்டுக்கொன்ற வழக்கில் அவர் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் அங்கொடா லொக்கா குறித்து விசாரணை தீவிரமடைந்து வருகிறது. அங்கும் பல்வேறு கொலை, கொள்ளை, கடத்தல் ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரது கூட்டாளிகளில் ஒருவரான சோல்டா என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார். மேலும் அவரது கூட்டாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: