×

சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்ட வழக்கில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி நஷ்ட ஈடு தொகையை வழங்கியது கேரள அரசு!!

திருவனந்தபுரம் : சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்ட வழக்கில் நஷ்ட ஈடு தொகையாக ரூ. 1.30 கோடியை நம்பி நாராயணனிடம் கேரள அரசு வழங்கியது.

இதன் பின்னணி:

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994ம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்றைய சூழலில், அது மிகுந்த பரபரப்பு உடைய செய்தியானது.மாலத்தீவு பெண்கள் இருவர், மற்றொரு விஞ்ஞானி உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அப்போதைய கேரள காவல்துறை தலைவர் சிபி மாத்யூஸ், அன்றைய காவல் கண்காணிப்பாளர்கள் ஜோஷுவா, விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதில், நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, இரண்டு மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.இந்த பொய் வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது.

ஆயினும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சப்-கோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, அவருக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழு சிபாரிசின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கேரள அரசு வழங்கியது.

Tags : Nambi Narayanan ,arrest ,government ,Kerala ,ISRO , Arrest, ISRO, Ex-Scientist, Nambi Narayanan, Rs 1.30 crore, Compensation, Government of Kerala
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...