×

நாளுக்கு நாள் வீரியமடையும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு: இணை நோய், வயது காரணம்; 5,834 பேருக்கு புது தொற்று

சென்னை: கொரோனா பலி தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் 118 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு கொரோனா நாளுக்கு நாள் வீரியமடைவது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 67,492 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,934 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் சென்னையில் 986, காஞ்சிபுரத்தில் 330, செங்கல்பட்டில் 388 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 5934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநில அளவில் கொரோனா பாதிப்பு 3,08,649 ஆக உயர்ந்துள்ளது. அதில் நேற்று ஒரு நாளில் ஆண்கள் 3377 பேர், பெண்கள் 2457 பேர் அடங்குவர். மாநிலத்தில் நேற்று 6,005 பேர் குணமடைந்தனர். ஒட்டுமொத்தமாக 2,50, 680 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 52,810 பேர் உள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 118 பேர் இறந்தனர். இதில் தனியார் மருத்துவமனையில் 47, அரசு மருத்துவமனையில் 71. மாவட்ட வாரியாக சென்னை 23, கன்னியாகுமரி 13, நெல்லை, திருவள்ளூர், செங்கல்பட்டு 8, தஞ்சாவூர், திருவண்ணாமலை தலா 6, திருச்சி, திருப்பூர், தென்காசி, ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா 4, திருவாரூர் 3, வேலூர், தேனி, சிவகங்கை, சேலம், நாகை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 2, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 118 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 107 பேர் இணை நோய்கள், முதியவர்கள் ஆவர்.
இவர்களில் 11 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மாநில அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில அளவில் கொேரானா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,159 ஆக உயர்ந்துள்ளது.

* பழைய மரணங்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 11, 16, 22, 25, 27, 31 ஆகிய நாட்களில் கன்னியாகுமரி, திருவாரூர், ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள் இறந்துள்ளனர். இதில் கன்னியாகுமரியை சேர்ந்த 68 வயது ஆண் இறந்து சரியாக ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவர் கொரோனாவால் உயிர் இழந்தது நேற்று தான் அதிகாரபூர்வமாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu , Day by day, malignant corona, Tamil Nadu, 118 people in a single day, deaths, co-morbidities, age cause, 5,834 people
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...