ராஜபாளையத்தில் இந்திய மருத்துவ சங்க தலைவர் கொரோனாவுக்கு பலி: அடுத்தடுத்து 2 டாக்டர்கள் இறந்ததால் துயரம்

ராஜபாளையம்: கொரோனா பாதிப்பால், ராஜபாளையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு டாக்டர் உயிரிழந்துள்ளார். சமூகசேவை, இலக்கியப் பணிகளில் ஆர்வமுள்ள இரு டாக்டர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதால் ராஜபாளையம் பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர் கோதண்டராமன் (66). இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜபாளையம் பகுதி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் கோதண்டராமனுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 20 நாட்களாக இருந்த கோதண்டராமன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ராஜபாளையம் மக்களிடையே மிகவும் பிரபலமான டாக்டர் சாந்திலால் கடந்தவாரம் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு டாக்டர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை சோகமடையச் செய்துள்ளது. இறந்த டாக்டர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமின்றி சமூக சேவகர்கள், இலக்கியவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: