×

புதிய கல்விக் கொள்கை எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் பொக்ரியால் தகவல்

புதுடெல்லி: ‘புதிய கல்விக் கொள்கையில் எந்த மாநிலத்தின் மீதும் மொழியை திணிக்கவில்லை,’ என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்றும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் செய்யப்படுவதால் பழைய கல்விக் கொள்கைக்கு மாறாக இது அமையும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல், புதிய கல்விக் கொள்கையின் மூலம் வரும் 2030-க்குள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல மாற்றங்களுக்கு இது வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்தார். இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையை தொடர்பாக திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று முன்தினம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் மனுவை அளித்தார். இந்நிலையில், இந்த மனுவுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் மூலம் தமிழில் பதில் அளித்துள்ளார். அதில், ‘புதிய கல்வி கொள்கை எந்த மொழியையும், எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கவில்லை. பயிற்று மொழியை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து நான் ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை இதன் மூலம் உருவாக்குவோம்,’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pokri ,state , The new education policy, no state, does not impose language, as informed by Union Minister Pokri
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...