புதுடெல்லி: ‘ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ‘நியாய்’ திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்,’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதத்தை அளிக்கும் ‘நியாய்’ திட்டம் செயல்படுத்தப்படும், என கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, ‘ஜன்தன் கணக்குகள், அனைத்து பென்சன் கணக்குகள் மற்றும் பிரதமர் கிசான் கணக்குகள் மூலமாக, மக்கள் அனைவருக்கும் தலா ரூ.7,500 நிதியுதவியை வழங்க வேண்டும்,’ என மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நகரங்களில் வேலைவாய்ப்பு இன்றி அவதிப்படுவோருக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற திட்டத்தையும், நாடு முழுவதும் இருக்கும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நியாய் திட்டத்தையும் செயல்படுத்துவது அவசியமாகும்,’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளது குறித்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.