வாலாஜாபாத்: குண்டும், குழியுமாக உள்ள சாலையை புதுப்பித்து, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் இருந்து பிச்சைநாயக்கன் குளம் வரை செல்லும் சாலை வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையை இணைக்கும் சாலையாக அமைந்துள்ளது. இவ்வழியாக பூசிவாக்கம், புத்தாகரம், கிரிபேட்டை உள்பட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்ச்சாலையில், ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும், பள்ளங்களில் விழுந்து காயமடைந்து, விபத்தில் சிக்கும் அவலமும் உள்ளது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் என பல அதிகாரிகளிடம், பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.