சென்னை: நாட்டின் அனைத்துத் தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக்களை பிரிக்கும் போது ஆண்களைப் போலவே பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு வழங்ககோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தகைய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.
இதனையடுத்து இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியம் போற்றுபவர்கள் மத்தியில் ஆதரவு கரம் பெறப்பட்டது. இதனையடுத்து, இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த தீர்ப்பை வரவேற்றார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டதாவது: நாட்டின் அனைத்துத் தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும், சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென கடந்த 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞரின் நகர்வின் மூலம் திமுகவுக்கு கிடைத்த வெற்றி இதுவாகும் என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.