×

ஜம்மு, காஷ்மீரில் தலா ஒரு மாவட்டத்திற்கு சோதனை அடிப்படையில் 4ஜி இணையச் சேவை: மத்திய அரசு

டெல்லி: ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா ஒரு மாவட்டத்திற்கு சோதனை அடிப்படையில் 4ஜி இணையச் சேவை அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “சூழ்நிலைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு அங்கு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அதிவேக இணையச் சேவையை குறிப்பிட்ட பகுதிகளுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. அரசு 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சூழ்நிலையை ஆய்வு செய்யும்.

ஆனால் எல்லைப்பகுதிகளுக்கு அதிவேக இண்டெர்நெட் சேவை தரமுடியாது, இப்போது தர முடிவெடுத்துள்ள பகுதியிலேயே சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்துதான் தர முடியும்” என்று தெரிவித்தார். இந்நிலையில்தான் மத்திய அரசு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா ஒரு மாவட்டத்துக்கு முதலில் சோதனை அடிப்படையில் 4ஜி இணையச்சேவையை வழங்க அனுமதியளிப்போம் என்று தெரிவித்துள்ளது.

இதன் விளைவுகள் என்னவென்பது பற்றி ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்யப்படும், ஒட்டுமொத்தமாக 2 மாதங்களுக்குப் பிறகு சூழ்நிலை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேலும் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதிவேக இணையதள சேவையை அனுமதித்தால் ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளுக்கு தூண்டுகோலாக அமைந்து விடும் என்று மத்திய அரசு நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்ற அமர்வு இதன் மீதான விசாரணையை 2 வாரங்கள் கழித்து மீண்டும் நடத்துவதாக தெரிவித்துள்ளது.



Tags : Kashmir ,Jammu ,district ,Central Government , 4G Internet Service, Jammu and Kashmir
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...