டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனையில் காணொலி காட்சி மூலமாக தலைமை செயலகத்தில் இருந்து பங்கேற்றுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக சற்று குறைய தொடங்கியிருந்தாலும் தென் மாவட்டங்களை பொறுத்தவரை கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வரும் காரணமாக தொடர்ச்சியாக தலைமை செயலாளர் மற்றும் முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறித்தும் ஒரு விரிவான விளக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் 70% ஊழியர்களுடன் பணிக்கு வரலாம். அதேபோன்று பாதுகாப்பு நடைவடிக்கைகளுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் கொரோனா கட்டுக்குள் இருக்கிறதா என்பது குறித்த ஒரு விளக்கத்தையும் முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக விளக்கமளிக்க இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி தொடர்ச்சியாக நிதிகளை வலியுறுத்தி வருகிறார். மருத்துவ உபகாரணங்களுக்காக 3,000 கோடி வழங்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தொழில்துறையை மேம்படுத்த 1,000 கோடியும், பொருளாதாரத்தை மேம்படுத்த 9,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என சுமார் 16,000 கோடி ரூபாய்க்கு மேலாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம், பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். ஆகவே இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்குவதோடு மட்டுமின்றி தமிழகத்துக்கு போதுமான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.