கேரள விபத்தில் பலியான துணை விமானி மனைவி கதறல் இது எனது கணவர் இல்லை

ஆக்ரா: துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த வௌ்ளியன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். விபத்தில் துணை விமானி அகிலேஷ் சர்மாவும் பலியானார். அகிலேசுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவரது கர்ப்பிணி மனைவி மேகாவுக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு விபத்தில் கணவர் அகிலேஷ் இறந்த செய்தியை குடும்பத்தினர் மேகாவிடம் கூறாமல் மறைத்துவிட்டனர்.

இந்நிலையில் விமானி அகிலேஷ் உடல் இறுதி சடங்கிற்காக நேற்று முன்தினம் சொந்த ஊரான ஆக்ராவிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது திடீரென கணவரின் உடலை பார்த்த அகிலேஷ் மனைவி அதிர்ச்சி அடைந்தார். “இவர் யார்? இது எனது கணவர் கிடையாது. எனது கணவர் எனக்காக நான் பிரசவம் பார்க்கவுள்ள மருத்துவமனையில் காத்திருக்கிறார்” எனக் கூறி கதறி அழுதார். கணவரை இழந்த அதிர்ச்சியில் மேகா சுயநினைவை இழந்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருந்து வருகின்றார். மனைவியின் பிரசவத்தின் போது உடன் இருக்க வேண்டும் என்பதற்காக அகிலேஷ் ஆகஸ்ட் 21ம் தேதியில் இருந்து விடுப்பு எடுக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: