மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பு பாஜ அரசு தப்பியது

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 21 இடங்களை பெற்ற பாஜ சுயேச்சைகள், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. பைரேன் சிங் முதல்வராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில், 3 பாஜ எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.

பின்னர் தங்கள் முடிவை திரும்ப பெறுவதாகவும் அரசுக்கு மறுபடியும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர். எனினும் பாஜ அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என காங்கிரஸ் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில், பாஜ அரசுக்கு ஆதரவாக 28 எம்எல்ஏக்களும், எதிராக 16 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். காங்கிரசின் 24 எம்எல்ஏக்களில் 8 பேர் கொறடா உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Related Stories: