எடப்பாடி முதல்வரா? எம்எல்ஏக்கள் தேர்வு செய்பவருக்கே பதவி: அமைச்சர் செல்லூர் ராஜூ தடாலடி பேட்டி

மதுரை: ‘‘எம்எல்ஏக்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே முதல்வர் ஆவார்’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தடலாடி பேட்டியளித்துள்ளார். மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ,வில் உள்ள நயினார் நாகேந்திரன், மீண்டும் அதிமுகவிற்கு வந்தால், வரவேற்போம். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிமுக வலுவோடுதான் இருக்கும். இனிமேல் மேலும் வலுப்பெறும். சசிகலா வெளியே வருவதில் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி செல்கிறோம்.

தமிழகத்தில் 1967ல் திமுக பொதுச்செயலாளராக இருந்த அண்ணா தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்பு அதிமுகவில் எம்எல்ஏக்களால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் யாரும் தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல்தான், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்று கூடி, யாரை முதல்வர் என்கிறார்களோ, அவரே தமிழக முதல்வர் ஆவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர் என்று கூறாமல் எம்எல்ஏக்கள் தேர்வு செய்பவர்தான் முதல்வராவார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தடாலடியாக கூறியிருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: