புதுடெல்லி: வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்கத்தின் தரப்பில் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘கொரோனா காரணமாக குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 2 ஆயிரம் தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வர வேண்டும். மேலும் தற்போதைய நிலையில் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, தங்குமிடம், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கிட அங்கு இருக்கும் இந்திய தூதரகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘கொரோனா காரணத்தினால் குவைத் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்திய தூதரகத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது. இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’’ என குறிப்பிட்டார். இதையடுத்து உத்தரவில், குவைத் நாட்டில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்பது தொடர்பான விவகாரத்தில் தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து இந்திய தூரகம் மற்றும் மத்திய அரசு 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.