சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு வரும் 19ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழகத்தின் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சென்னை-சேலம் இடையில் உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அதுதொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் முக்கியமான மனு என்பதால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போது உள்ள நேரத்தில் முழுமையான வாதங்களை கண்டிப்பாக வைக்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டனர்.

Related Stories: