கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.20 கோடியே 86 லட்சம் மதிப்பில் 60 பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டினார்.
மேலும் மாவட்டத்தில் ரூ.15 கோடியே 15 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கட்டிட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 15,016 பயனாளிகளுக்கு ரூ.33 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் மகளிர் சுயஉதவி குழு, விவசாய பிரதநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று கருத்துக்களை கேட்டறிந்தார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, எம்எல்ஏக்கள் குமரகுரு, பிரபு மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.