பொன்னேரி: மதுகுடிக்க தண்ணீர் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் முதியவரை அடித்துக்கொன்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி அன்னை தெரசா தெருவை சேர்ந்த ராமலிங்கம் (60). அதே தெருவை சேர்ந்த அவரது நண்பர் திருநாவுக்கரசு (45). இருவரும் நந்தியம்பாக்கம் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கி அருகில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்று மதியம் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆசாமி ஒருவர் அவர்களிடம் மது குடிக்க தண்ணீர் பாட்டில் கேட்டார். இதில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த ஆசாமி ராமலிங்கத்தை அடித்து கீழே தள்ளினார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ராமலிங்கம் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அருகிலிருந்த திருநாவுக்கரசு கூச்சலிட்டார். இதனையடுத்து, அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.