சென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்

சென்னை: சென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி தமிழக அரசிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்னதாக சென்னையில் ஒரு வார கால பயிற்சி முகாமில் சென்னை அணி வீரர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சென்னை அணி வீரர்கள், நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் தவிர்த்து மைதானத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் பயிற்சி மேற்கொள்ள சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக அரசிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. மிக விரைவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை அணியை சேர்ந்த இந்திய வீரர்கள் அனைவரும் சென்னை வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கத்திற்கு மாறான பல பாதுகாப்புகளும், திட்டங்களும் இந்தமுறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.

Related Stories: