ஆந்திராவிற்கு கடத்திய மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல்: வாலிபர் கைது

ஊத்துக்கோட்டை: தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு கடத்திய 192 மதுபாட்டீல்களை போலீசார் காருடன் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். ஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி ஆந்திராவிற்கு காரில் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது, உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் எஸ்ஐக்கள் வரதராஜன், சம்பத் மற்றும் ஏட்டுகள் அரி, விக்னேஷ் ஆகியோர் ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரம் பஸ் நிறுத்தம் அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற ஒரு காரை சோதனை செய்ய போலீசார் மடக்கினர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதையறிந்த போலீசார் காரை விரட்டிச்சென்று சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர். பின்னர், அந்த காரை சோதனை செய்ததில், அதில், நூற்றுக்கணக்கான மதுபான பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. பின்னர், அந்த காரையும் அதில் இருந்த மதுபானங்கள் மற்றும் வாலிபரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில், மதுபானங்களை தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு காரில் கடத்தியதாக தாமரைகுப்பத்தை சேர்ந்த பிரகாஷ் (38) என்பது தெரிந்தது. இவரிடம் இருந்து 192 மதுபானங்கள் மற்றும் ஆந்திர மாநில காரை பறிமுதல் செய்தனர். மேலும், இவர் தமிழக டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி ஆந்திர மாநிலம் பகுதியில் அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. மேலும், இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: