சோழவரம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

புழல்: சோழவரம் ஏரி மதகு அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான சோழவரம் ஏரி மதகு அருகே உள்ள கரையில் ஆண் சடலம் கிடப்பதாக நல்லூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜனுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்தார். அவர் அருகே ஹெல்மெட் ஒன்று கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, இவர் யார், எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: