காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தையால் பரபரப்பு: போலீசார் மீட்டனர்

அண்ணாநகர்: நொளம்பூர் ஏரி ஸ்கீம் 6வது தெருவை சேர்ந்தவர் மாயவன். இவரது மனைவி அமுதா. தம்பதிக்கு 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமுதா புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் தினமும் தன்னை கொடுமைப்படுத்துகிறார். மேலும், காஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து, எனது 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி வருகிருகிறார். எனவே, எனது மகள்களை மீட்டுத்தர வேண்டும், என தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில், மாயவனிடம் விசாரிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். போலீசாரை பார்த்த அவர், வீட்டிற்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டு, தனது 2 மகள்களுடன் காஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டின் கதவை உடைத்து 2 மகளையும் போலீசார் மீட்டு அமுதாவின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாயவன் தீடீரென சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். போலீசார் அவரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு, தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: