கோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா?

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் கடந்த 7ம்தேதி இரவு ஏற்பட்ட விமான விபத்தில் பைலட், துணை பைலட் உள்பட 18 பேர் இறந்தனர். இதில் 4 பேர் குழந்தைகள். 149 பேர் காயங்களுடன் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 23 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேரில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், விபத்து நடந்தது குறித்து விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு மழைதான் காரணம் என்று கூறப்பட்டாலும், வேறு காரணங்களும் இருக்கலாம் என விசாரணை நடந்து வருகிறது.  

ஓடுபாதையில் விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து நீண்டதூரம் முன்னோக்கி சென்ற பின்னரே தரையிறங்கியது தெரிய வந்துள்ளது. விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது விமானத்தை தரையிறக்கினால் பிரேக் பிடிக்க முடியாத நிலை ஏற்படலாம். இதுதான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்  என்று கருதப்படுகிறது. தீவிர விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திஸ்சிங் பூரி  தெரிவித்துள்ளார். பலியான பயணிகளுக்கு ரூ.1 கோடி: விபத்தில் சிக்கிய விமானம் ரூ.325 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும்.

Related Stories: