பாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது லோடா கிராமம். பாகிஸ்தானில் வசித்து வந்த சிறுபான்மை இந்து மதத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர், அங்குள்ள மத சித்ரவதைகளை தாங்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்துக்கு வந்து குடியேறினர். இங்கு விவசாய நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இவர்களில் 11 பேர் தங்கள் வசித்து வந்த குடிசை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஒருவர் மட்டுமே குடிசைக்கு வெளியே, நிலத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்பகுதியை சேர்ந்த சிலர் இதை பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து, சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் அருகிலும், குடிசையை சுற்றிலும் சில ரசாயன பொருட்களின் வாசனை வீசியது. இதனால், அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்தார்களா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிருக்கு போராடியவர் சுயநினைவுக்கு திரும்பிய பிறகே, உண்மை தெரிய வரும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: