சென்னை: கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் தமிழ்க் கடவுள் முருகனை வேண்டி பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை கண்டித்து ஆகஸ்ட் 9ம் தேதி(நேற்று) பாஜகவினர் அனைவரும் வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று தமிழகம் முழுவதும் நேற்று இரவு பாஜகவினர் தங்களுடைய வீடுகளில் வேல், முருகர் படத்தை வைத்து பூஜை செய்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பூஜை நடந்தது. இதில் பாஜக துணை தலைவர் எம்.என்.ராஜா, பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாடி, வேல் முருகனுக்கு பூஜை செய்தனர்.