சேலம் அருகே பயங்கரம் வாலிபரை கடத்தி கொடூர கொலை: கை, காலை கட்டி, முகத்தில் டேப் சுற்றி சரமாரி தாக்குதல்; காருக்குள் சடலமாக மீட்பு; உறவினர் உள்பட 3 பேர் கைது

இளம்பிள்ளை: சேலம் அருகே எம்ஏ பட்டதாரி வாலிபரை காரில் கடத்திச் சென்று கை, கால்களைகட்டிப் போட்டு முகத்தில் டேப் சுற்றி கொலை செய்த உறவினர் உள்பட 3 பேர் சிக்கினர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே நல்லண்ணம்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வம். இவரது மகன் பூபாலன் (24). எம்.ஏ பட்டதாரி. கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் இருந்து பூபாலன் வெளியே சென்றார். அதன் பின்னர் திரும்பவில்லை. இது குறித்து செல்வம் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு  இளம்பிள்ளை அருகே ரெட்டிமணியகாரனூர் மண்கரடு பகுதியில் ஒரு கார் நீண்ட நேரமாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மகுடஞ்சாவடி போலீசார்  சென்று காரை திறந்து பார்த்தனர். அப்போது காரின் பின்  சீட்டில் கை, கால்கள் கயிறால் கட்டப்பட்டு, முகத்தில் டேப் சுற்றப்பட்ட நிலையில் பூபாலன் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக பூபாலனின் பெரியப்பா கந்தசாமி மகன் ஏழுமலை (35), கார் உரிமையாளர் ஜெகன் (21), சங்ககிரி மேட்டுக்காட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (26) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். கொலையான பூபாலன் குடும்பத்துக்கும், ஏழுமலை குடும்பத்துக்கும் நிலப்பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பூபாலனை தீர்த்துக்கட்ட ஏழுமலை சதித் திட்டம்  தீட்டி, கூட்டாளிகளுடன் சென்று காரில் கடத்தியுள்ளார். பின்னர் சத்தம் போடாமல் இருக்க வாய், மூக்கு உள்பட பல பகுதிகளில் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், மூச்சு திணறிய பூபாலன் சிறிது நேரத்தில் இறந்தார். இதை பார்த்த அந்த கும்பல், உடலுடன் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: