தருமபுரி: கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஒகேனக்களுக்கு நீர் வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் ஐவர் பவனி அருவிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள வயநாடு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழக அணைகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதாவது இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 73 ஆயிரம் கனடியும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனடியும் மற்றும் கபினி அணையின் துணை அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனடியும் தண்ணீர், தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நீர் வரத்தாரனது அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, மற்றும் ஐவர் பவனி அருவிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல் அருவியின் அருகில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வராததால் அருவி வெறிச்சோடி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.