மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி: ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் இயங்கும்

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை நாளை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து, நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள் அதாவது, 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மாவட்ட ஆட்சி தலைவர்களின் அனுமதியுடன் நாளை (10ம் தேதி) முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சி பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடம் பெற வேண்டும்.

அதேபோன்று, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் நாளை (10ம் தேதி) முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் அறிவிப்பின் மூலம், சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் நாளை (திங்கள்) முதல் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். அதே நேரம், ஆண்டுக்கு ₹10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானம் வருவதுடன் அதிக மக்கள் வரும் பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்க அனுமதி இல்லை.

* சென்னை மாநகராட்சி பகுதியில் இதற்கான அனுமதியை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட

கலெக்டரிடமும் பெற வேண்டும்.

* முதல்வர் அறிவிப்பின் மூலம், சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி பகுதிகளில் ஆண்டுக்கு ₹10 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானம், அதிக மக்கள் வரும் பெரிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்க அனுமதி இல்லை.

Related Stories: