மாநிலங்களில் உடனே நடைமுறைப்படுத்தாமல் புதிய தேசிய கல்வி கொள்கையை நிறுத்தி வைக்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேசியக் கல்வி கொள்கை 2020ஐ  நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதிய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் ஒருதலைப் பட்சமான முடிவானது, இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு 2019ம் ஆண்டு பொதுமக்களின் கருத்தறிய முன்வைக்கப்பட்ட போது, அதன் பல அம்சங்களை திமுக எதிர்த்ததுடன், அதற்கான பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020, 2019 ஆண்டு வரைவில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இல்லை; எங்களது எந்தப் பரிந்துரைகளும் அதில் சேர்க்கப்படவில்லை.

மும்மொழிக் கொள்கை தமிழ் மொழியின் பெருமை மற்றும் மாண்பைக் குறைப்பதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் உள்ளது. தமிழ் கற்பதைக் கட்டாயமாகக் கொண்ட இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அது நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான மதிப்பீட்டு முறை, தற்போது 9ம் வகுப்புக்கும் செமஸ்டர் தேர்வுகள் போன்றவை எல்லாம் நிர்வாகச் சுமையை அதிகரிக்கச் செய்யும். பள்ளித் தேர்வுகளோடு புதிதாக, அனைத்துத் துறைகளுக்குமான கல்லூரி சேர்க்கைகளுக்குப் பொது நுழைவுத்தேர்வுகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் சந்திக்க கூடுதலாக மற்றொரு தேர்வைச் சேர்ப்பது மட்டுமின்றி, அத்தகைய தேர்வுகளை நன்றாக எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளில்கூட சேர முடியாத விளிம்புநிலைச் சமூக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும் ஆகிவிடும்.

கல்வியில் பெண்கள்: அனைத்துப் பிரிவுகளுக்கும் பன்முக மதிப்பீட்டு முறைகள், விருப்பத்தின் அடிப்படையில் தொழில் பயிற்சிகள், பொதுத் தேர்வுகள் ஆகியவற்றைக் கொண்ட கட்டமைப்பு, ஒரு பெண் குழந்தை தனது கனவுகளைப் பின்தொடரத் தடையாகவே செயல்படும்.

தேசிய கல்விக் கொள்கையில் இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தொழில் பயிற்சி அறிமுகம்: தேசிய கல்விக் கொள்கையில் தொழில் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாகும். அரசுப் பள்ளிகளை இணைத்தல்:  தொலைவு மற்றும் பயணத் தடைகளின் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளில் இருந்து வெளியேற வழிவகுக்கும்.  அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களை விடத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவு தன்னாட்சி அதிகாரமும், செயல்படுவதற்கான சுதந்திரமும் வழங்கப்படுகின்றன. இது கல்வித் துறையைத் தாராளமயமாக்குவது, கல்வியை வணிகமயமாக்குவதுடன், ஏற்றத்தாழ்வுகளையும் அதிகரிக்கும்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் கடும் அநீதியாகும்.  இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளின் மூலம் தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவில் கல்வியை முன்னேற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக்கு எதிரான இந்தக் கொள்கை, இதுவரை நம் நாடு கல்வியில் அடைந்த முன்னேற்றத்திற்கு அதிகத் தீங்கையே விளைவிக்கும். மத்தியில் அதிகாரத்தை குவித்தல், மாநிலங்களின் குரல்களைப் புறக்கணிக்கத்தல் ஆகிய இத்தகைய முடிவுகள், இந்த நாட்டுக் குடிமக்களின் நலன்களுக்கு எதிரானவை.

சமூகநீதியைக் காக்க உறுதிபூண்ட ஒரு கட்சியின் தலைவர் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவன் என்ற முறையில், தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டின் அடிப்படையான மதிப்பீடுகள் அனைத்தையும் சிதைக்கக் கூடிய வகையில் உள்ளதாகவே நான் நம்புகிறேன். நாடு முழுவதும் உள்ள நமது குழந்தைகள் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும், அதனை நீங்கள் முழுமையாக உணரவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நான் முன்வைக்கிறேன்.

1. கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மற்றும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய, மாநிலங்கள் மற்றும் மத்தியில் இருந்து தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதற்கான ஓர் ஆலோசனைச் செயல்முறையை மீண்டும் நிறுவுங்கள்.

2. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மறுவடிவமைத்து, நாடாளுமன்ற அமர்வின் மூலம், நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சிமுறை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நடைமுறையை உத்தரவாதப் படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிய செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை தேசியக் கல்வி கொள்கை 2020ஐ நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவாதம் மற்றும் கலந்துரையாடல் செயல்முறைகள் நமது ஜனநாயகத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு மையமானவையாகவும், அனைத்து மாணவர்களுக்கும்  நலன் பயக்கக் கூடியவையாகவும் இருக்கும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிஐடியூ மூத்த தலைவர் மறைவுக்கு இரங்கல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்ைக: மூத்த சி.ஐ.டி.யூ தலைவரான கே.வைத்தியநாதன் வயது முதிர்வின் காரணமாகத் தனது 97வது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Related Stories: