கசக்க துவங்கி விட்டது வெளிநாட்டு மேற்கல்வி அமெரிக்க கல்வி மோகத்துக்கு கொரோனா வைத்தது வேட்டு

* வேலையும் கிடைக்காது என்பதால் வெறுத்து போயினர் இந்திய மாணவர்கள்

நியூயார்க் : கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருப்பதுடன், இந்திய மாணவர்களின் வெளிநாட்டு கல்வி மோகத்துக்கும் குறிப்பாக அமெரிக்க கல்வி மோகத்துக்கு  பெரும் வேட்டு வைத்துள்ளது. 50 சதவீத மாணவர்கள் வெளிநாட்டு கல்வியே வேண்டாம் என்று வெறுத்துப் போய் விட்டனர் என்று சர்வே கூறுகிறது. ஒரு பக்கம் கொரோனா பீதி, இன்னொரு பக்கம் , ஆன்லைன் மூலம் மேற்கல்வியை அமெரக்க பல்கலைக்கழகங்கள் நடத்தும் நிலையில், வௌிநாட்டு மாணவர்களுக்கு கல்வி விசா ரத்து செய்யப்படும்  என்ற அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு. இதில் அதிகம்  ஆடிப்போனவர்கள் வெளிநாட்டுக்கு குறிப்பாக அமெரிக்காவில்  மேற்கல்வி படிக்க பல லட்சங்களை கடன் வாங்கி செலவழித்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் தான்.

  கொரோனா பீதி வந்துவுடன் பல மாணவர்கள் இந்தியா திரும்ப தயாராகி விட்டனர். டிரம்ப் உத்தரவு வந்ததும் மீதி பேரும் கிளம்ப தயாராகிவிட்டனர். போதாக்குறைக்கு, அமெரிக்காவில் வேலை இழந்த பல லட்சம் இந்தியர்களும் விமானத்துக்காக காத்திருந்தனர். எப்படியோ ஏர் இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தால் இதுவரை கடந்த 15 ம் தேதியுடன் 7 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி விட்டனர். அப்பாடா, போதும் அமெரிக்க கனவு என்று முடங்கி விட்டனர். இனி, வெளிநாட்டு கல்வி மோகத்தில் தயாராக உள்ள இந்தாண்டு மாணவர்களுக்கு தான் அடுத்த சோதனை. ஆண்டு தோறும் இரண்டரை லட்சம் பேர் வரை அமெரிக்காவில் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஸ்டெம் என்று சொல்லப்படும் சயின்ஸ். டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேத்தமேடிக்ஸ் (கணிதம்) ஆகிய பிரிவுகளில் மேற்படிப்புக்காக விண்ணப்பிக்கின்றனர். ஸ்டெம் பிரிவுகளில் அல்லாமல், பட்டப்படிப்புகள் சிறப்பு பயிற்சிகள் என்று சில ஆயிரம் பேர் அமெரிக்காவில் இறங்குகின்றனர். இப்போது ஸ்டெம் மேற்படிப்பில் சேருவோரை விட, ஸ்டெம் அல்லாத படிப்பில் விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள் தான் அதிக பீதியில் உள்ளனர். இவர்கள் நோக்கம், கனவு எல்லாம் படித்தவுடன் அமெரிக்காவில் ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்பது தான்.

  இந்த கனவு, மோகம் இந்த கொரோனா காலத்தில் அறவே அடிபட்டுப்போனது. இதுவரை வந்தே பாரத் விமானங்களில் 7 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி விட்டனர். அதில் பாதிக்கு மேல் மாணவர்கள். இவர்களுக்கு ஆன்லைன் மூலம் தான் வகுப்புகள் நடக்கின்றன என்பதால் செலவை மிச்சம் செய்ய திரும்பி விட்டனர். ஆனால் டிரம்ப் உத்தரவால், இனி அமெரிக்க கல்வி வீணா என்ற பீதியில் இந்தியாவில் உள்ள மாணவர்கள் உள்ளனர்.

  குறிப்பாக ஸ்டெம் அல்லாத படிப்புகளில் விண்ணப்பிக்கும் பல ஆயிரம் மாணவர்கள், இந்த குளிர்கால செமஸ்டர் மூலம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்க தயாரில்லை. சமீபத்தில் வெளியான பல்வேறு சர்வேக்களில், 51 சதவீதம் பேர் அமெரிக்காவில் மேற்கல்வி படிக்கவோ, பட்டப்படிப்பு, பயிற்சிகளுக்கு செல்லவோ விரும்பவில்லை என்று  தெரியவந்துள்ளது. அதேசமயம், பெற்றோர் பயத்தை ஒதுக்கி விட்டு, இவர்களில் பெரும்பாலோர், கொரோனா பீதி விலகியபின், 2021ல் கண்டிப்பாக அமெரிக்க கல்வி படிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.   எனினும், இப்போதைய சூழ்நிலையில், ஆன்ைலன் கல்வி முறை தொடரும் வரை அமெரிக்க கல்வி மட்டுமல்ல, வெளிநாட்டு கல்வி மோகம் சரிந்து விடும் என்று மட்டும் தெரிகிறது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

  அமெரிக்க, வெளிநாட்டு கல்விக்காக உதவும் ஏஜன்சிக்கள் தரப்பில் கூறும் போது, ‘அமெரிக்க மேற்கல்வி பற்றி ஸ்டெம் மாணவர்கள் பெரிதாக பயப்படவில்லை. ஸ்டெம் அல்லாத படிப்புக்கு செல்லும் மாணவர்கள் தான் பயப்படுகின்றனர். வேலை கிடைக்காதோ என்பது தான் அவர்கள் பயம். பணத்தை செலவிடுவதே அதற்கு தான் என்கிற போது அவர்கள் அச்சம் நியாயமானது தான் என்கின்றன.   கடந்த 2018ம் ஆண்டை விட, கடந்தாண்டு 3 சதவீதம் அதிகமாக, அதாவது 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் அமெரிக்க கல்வியில் சேர்ந்துள்ளனர். ஆனால், இதில் இந்தாண்டு பாதிக்கு மேல் குறையும் என்று தெரிகிறது. அடுத்தாண்டு வேண்டுமானால், நிலைமை சீரானால், மீண்டும் இந்திய மாணவர்கள் படையெடுக்க துவங்கலாம் என்று கல்வி ஏஜன்சிக்கள் நம்புகின்றன.

  வெளிநாட்டு கல்வியை பொறுத்தவரை, அமெரிக்காவில் தான் கடந்த 1999 முதல் 2006 வரை ஆண்டுதோறும் 1  லட்சத்துக்கு மேல் இந்திய மாணவர்கள் படித்தனர். அதன் பின் தான் பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் படிக்க துவங்கினர். எனினும்,அமெரிக்க கல்விக்கு இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் சராசரியாக மொத்தம் 163 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது பல மடங்கு சரிந்து கொண்டிருக்கிறது.

ஸ்டெம் - நான் ஸ்டெம்

* ஸ்டெம்: சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேத்தமேடிக்ஸ் என்பதன் முதல் ஆங்கில எழுத்துக்களை சேர்த்தது தான் ஸ்டெம். இந்த பட்டதாரிகள், மேற்படிப்புக்கு, ஆராயச்சி படிப்புக்கு கடைசியாக வேலையில் சேர வருகின்றனர். இவர்கள் பெரிதாக அச்சப்படவில்லை.

* நான் - ஸ்டெம்: ஸ்டெம் அல்லாம் பிளஸ்2 படித்தவர்கள் பட்டப்படிப்புக்கு வருகின்றனர். சிலர் வேறு படிப்புகளில் சேர்கின்றனர். சிலர் பயிற்சி படிப்புக்கு வருகின்றனர். இவர்கள் நோக்கம் வேலை தான்.

* ஆண்டு தோறும் 2 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 75,000 பேர் நான் - ஸ்டெம் மாணவர்கள் தான்.

* ஸ்டெம் மாணவர்களுக்கு எச்1பி விசா கிடைக்கும்; லட்சம் சம்பாதிக்கும் வேலை கிடைக்கும்.

* நான் - ஸ்டெம் மாணவர்களுக்கு எச்1பி விசா சிக்கல் தான். கல்வியில் சாதித்து காட்ட வேண்டும்.

இந்தியா - சீனா போட்டி

* அமெரிக்க படிப்புகளில் போட்டாபோட்டி போடுவோர் இருவர் தான்; ஒருவர் இந்தியர். இன்னொருவர் சீனர்.

* ஆண்டுதோறும் சீன மாணவர்கள் எண்ணிக்கை 3.50 லட்சம். இந்திய மாணவர்களை விட, ஒரு லட்சம் பேர் அதிகம்.

* வேலையிலும் இந்த இரு நாட்டவருக்கு தான் போட்டி.

அமெரிக்க கல்வியில் இந்தியர்

* இந்திய மாணவர்கள் மோகம் 1999 ம் ஆண்டு முதல்.

* ஆண்டு தோறும் 2 லட்சம் மாணவர்கள்.

*  இதுவரை அதிகரிப்பு மொத்தம் 163 சதவீதம்.

* 2006 -2013 சரிவு 25 சதவீதம்.

அமெரிக்க கல்வியில்... டாப் இன்ஜி பல்கலைகள்

* சான்ஜோஸ்    * மிசோரி

* மிசிசிபி        * சின்சினாட்டி

* டெக்சாஸ்    * இண்டியானா

Related Stories: