×

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..: மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்!

மூணாறு: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில்  கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வருகிறது. இந்த மாவட்டம் பெரும்பாலும்   மலைப்பகுதி என்பதால், நேற்று முன்தினம் இரவு 5க்கும் மேற்பட்ட இடங்களில்  கடும்  நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான சாலைகளில் மண் மூடி, போக்குவரத்து பாதித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மூணாறில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள  ராஜமலை  பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணன் தேவன்  நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் இந்த நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு அருகே தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் தமிழக தொழிலாளர்கள்தான் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு 4 வரிசையாக 20 வீடுகள் உள்ளன. இதில் 80க்கு மேற்பட்டோர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று பணி முடிந்து திரும்பிய தொழிலாளர்கள், வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, இரவு 11 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மேடான நிலையில் இருந்த ஒரு தேயிலை தோட்டம் முழுவதுமாக சரிந்து, தொழிலாளர்களின் வீடுகள் மீது விழுந்தது. இதில், 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. வீடுகளில் இருந்த அனைவரும் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதனைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வரவழைக் கப்பட்டு, நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. இன்று மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 35க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் இறந்தவர்களுள் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : search , Munnar, landslides, deaths, Kerala
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...