* கலாசி பணியாளர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு.
* இவர்களுக்கு மாதந்தோறும் 20,000 முதல் 22,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
* ரயில்வேயில் குரூப் டி பிரிவின் கீழ் கலாசி பணியிடம் வரும்.
புதுடெல்லி: ரயில்வே துறையில் கலாசி அல்லது பங்களா பியூன் எனப்படும் பணியிடம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இருக்கிறது. முந்தைய காலத்தில், தொலைதூர இடங்களில் பணியாற்றும் அதிகாரிகள், இரவு நேரங்களில் பணி நிமித்தம் செல்லும் சமயங்களில் அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்புக்கும், தொலைபேசி வந்தால் பதிலளிப்பது, முக்கிய கோப்புகளை எடுத்து தருவது போன்ற அலுவலக பணிகளுக்காகவும் கலாசிகள் நியமிக்கப்பட்டனர். தொலைபேசி உதவியாளர் மற்றும் கலாசி (டிஏடிகே) எனப்படும் இப்பணியிடத்திற்கு முடிவு கட்டப்பட்டிருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அதன் உத்தரவில், ‘தொலைபேசி உதவியாளர் மற்றும் கலாசி நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே, புதிதாக கலாசி நியமனம் மற்றும் மாற்று நபர் நியமிக்கப்படுவது உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 2020, ஜூலை 1ம் தேதிக்குப்பின் கலாசி முறையில் நியமனம் நடந்திருந்தால், அது குறித்து மறுஆய்வு செய்யப்படும். இதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.