சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழகத்தின் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தேதி எதுவும் குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.சென்னை-சேலம் இடையே உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அதுதொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. மத்திய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜராக வேண்டிய தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா மற்ற விசாரணையில் இருந்து வருவதால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சேலம் -சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கை அடுத்த வாரத்திற்கு மாற்றியமைப்பதாக கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: