நெல்லை: ‘‘நீரை சேமிப்பது குறித்து, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டோம். அவர்கள் பல்வேறு இடங்களில் கடலில் கலக்கும் நீரை சேமிக்க தேவையான திட்டங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்பேரில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 10 மணிக்கு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். முன்னதாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், மருத்துவத் துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த சோதனையான காலக்கட்டத்தில் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசை கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. நம் நாட்டிலேயே கொரோனா சிகிச்சையில் குணம் அடைந்து திரும்பியவர்களும் தமிழகத்தில்தான் அதிகம். நீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டோம். அவர்கள் பல்வேறு இடங்களில் கடலில் கலக்கும் நீரை சேமிக்க தேவையான திட்டங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்பேரில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் 4ம் கட்ட பணிகளுக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்க உள்ளன. தற்போது நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 4வது கட்டப் பணிகள் டிசம்பர் 2021க்குள் நிறைவு பெறும்’’ என்றார்.