சென்னை: திருக்குவளையில் அமைக்கப்பட்ட கலைஞரின் மார்பளவு சிலையை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வழியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்த தலைவர் கலைஞர், பிறந்த வீட்டில், தவழ்ந்த வீட்டில், விளையாடிய வீட்டில், வளர்ந்த வீட்டில் இன்று அவரது திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இனி திருக்குவளை செல்பவர்கள் அனைவருக்கும், அந்த வீட்டில் தலைவர் கலைஞர் இருக்கிறார் என்ற நினைவுகள் வரும். கலைஞர் எங்கும் செல்லவில்லை, இங்கே தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றும். அத்தகைய உணர்ச்சியின் அடையாளமாகத்தான் இந்தச் சிலையைத் திறந்து வைத்திருக்கிறேன். முத்தமிழறிஞர் புகழ் வாழ்க. அவர் காட்டிய பாதையில் எந்நாளும் நடப்போம்.