கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் திறப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு தற்போது 90,000 கனஅடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த 3 நாட்களாக கபினி அணையில் இருந்து 50,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்திருந்த நிலையில், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மதியம் நீரின் அளவு கபினி அணைக்கு 60,000 கனஅடியாக உயர்ந்தது.

இதையடுத்து கபினி அணையில் இருந்து 60,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தற்போது 30,000 கனஅடி நீரை அதிகாரிகள் திறந்து வைத்துள்ளனர். கடந்த 10 நாட்களாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. ஆனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, சிக்மங்களூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 1 வாரத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

124.8 அடி உயரம் கொண்ட  கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 115 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், அணைக்கு 54,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 30,000 கனஅடி நீரை அதிகாரிகள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நீர் வெளியேற்றம் நாளை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து மட்டும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 90,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: