மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 1.35 அடியாக உயர்ந்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் கபினியில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு தற்போது 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக - கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்துத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்று காலை 65.55 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 28.99 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Related Stories: