சென்னை: தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிகளின் படி, காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயாளிகள் உள்ளிட்ட சில மாற்று திறனாளிகள் போட்டியிட முடியாத சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல்களில் மாற்று திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்களில் மாற்று திறனாளிகள் போட்டியிட 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு, தேர்தல்களில் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க அறிவிப்பை விரைவாக வெளியிட உத்தரவிடக்கோரி மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். பின்னர், தேர்தல்களில் மாற்று திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.