×

உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெங்கய்ய நாயுடு தகவல்

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி 2014-ம் ஆண்டில் இருந்து உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். தேவையை சமாளிக்கும் வகையிலான உணவு, சத்துகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான அறிவியல் என்ற தலைப்பில் இன்று எம்.எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளையில் நடந்த கலந்துரையாடலை தொடங்கி வைத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (எஸ்.டி.ஜி) என்ற தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வரையறைகளை 2015ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன.
யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உலக நாடுகள் உறுதியேற்று கொண்டன. 2030 ஆண்டுக்கு இன்னும் 10 ஆண்டுகள் உள்ளன. இந்த முயற்சியில் என்ன முன்னேற்றத்தை எட்டியிருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய காலம் இது. `பட்டினியே இல்லாத மற்றும் `நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கை என்ற இலக்குகளை அடைவதில் நாம் இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம்?

2019ஆம் ஆண்டில் உலக அளவில் உலக மக்கள் தொகையில் 9.7 சதவீதம் அல்லது 750 மில்லியன் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது. தேசிய, பிராந்திய மற்றும் உலக அளவில் அவசர, ஒருமித்த கவனத்துடன் கூடிய, உறுதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பட்டினியை குறைப்பது, சத்துக்குறைபாட்டைக் குறைப்பது, சிசு மரணத்தையும், குழந்தைகளிடம் மன வளர்ச்சியின்மை பாதிப்பையும், உடல் மெலிதலையும் குறைப்பதில் சமீப ஆண்டுகளாக இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஆனாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக நோய்த் தொற்று சூழ்நிலையில், பட்டினியும், சத்துக் குறைபாடும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுக்கும். வாழ்வாதாரங்கள் பறிபோனதாலும், பொருளாதார தேக்கத்தாலும் இந்த நிலை ஏற்படலாம். அமைதியான சில இடங்களில் கூட, பொருளாதாரத் தேக்கம் காரணமாக ஏழைகளுக்கு உணவு கிடைக்காமல் போய், உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசம் அடைந்துள்ளது என்று வெங்கய்ய நாயுடு பேசியுள்ளார்.



Tags : world ,Venkaiah Naidu , Hunger, Venkaiah Naidu
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்