சென்னை: கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரை வேறு இடத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் கடந்த மார்ச் 9ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து சட்டப்பேரவை விதிகளின்படி செப்டெம்பர் 24ம் தேதிக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்ட வேண்டியது கட்டாயம்.
இதற்கிடையில் கொரோனா பரவல், சட்டமன்றத்தில் உள்ள இட நெருக்கடி காரணமாக பேரவை கூட்டம் உரிய நேரத்தில் நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனையடுத்து இட நெருக்கடியை தவிர்க்க வேறு இடத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சட்டப்பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அதாவது சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் அல்லது சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் பேரவை கூட்டம் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் மாற்று இடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் மரத்தடியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.