கோவை: மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா தனது பெயரை மாற்றியது மட்டுமின்றி உருவத்தையும் மாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விதமான குற்றச்சம்பவங்களுடைய நிழல் உலக தாதாவாக வலம் வந்தவர் தான் இலங்கையை சேர்ந்த அங்கொட லொக்கா. இவர், இலங்கையில் இருந்து தப்பி கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் தஞ்சம் புகுந்து பிரதீப் சிங் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு வலம் வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் ஜூலை 3ம் தேதி அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இலங்கையில் அங்கொட லொக்கா பல்வேறு விதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக இலங்கை போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது. தனது பெயரை மாற்றி தன்னுடைய அடையாளத்தை மறைக்க நினைத்த அங்கொட லொக்கா, அடுத்தகட்டமாக அவருடைய உருவத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
முதற்கட்டமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது முகத்தை மாற்றக்கூடிய வகையில் மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அடுத்தகட்டமாக தனது முகத்தையும் மாற்றிக்கொண்டு வெளிநாடுகளில் தப்பி சென்று அடையாளத்தை மறைக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் திரைப்படத்தையும் மிஞ்சும் அளவிற்கு அங்கொட லொக்காவின் செயல்பாடுகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.