தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர்: நினைவு நாளை முன்னிட்டு கமல்ஹாசன் புகழாரம்

சென்னை: கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதிமுக தொண்டர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கலைஞருக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர், என புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டை ஐந்து முறை முதல்வராக ஆட்சி செய்தவர் கருணாநிதி. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் உறுப்பினராக இருந்த பெருமைக்கு உரியவர். செம்மொழி மாநாட்டை நடத்தியது, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு அளித்தது, இலவச தொலைக்காட்சி, இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவை அவரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதே. இன்று அவரின் நினைவுநாள் என்பதால் பல தலைவர்களும் கருணாநிதியின் நினைவுகளைப் பகிர்ந்துவருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: