சென்னை: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 10ம் தேதி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். பள்ளி திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. இருப்பினும் புதிதாக மாணவர் சேர்க்கை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனை போலவே அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 10ம் தேதி அறிவிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.