நெல்லை: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடியில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முடிவுற்ற ரூ.32.30 கோடி மதிப்பிலான 20 திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குணமடைவோர் சதவீதம் அதிகம்; இறப்பு விகிதம் குறைவு என்றார். தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.