சென்னை: சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயருக்கு வணிகச் சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த வணிகச் சின்னம் 2027ம் ஆண்டு வரை அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு கொரோனில் என பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறி, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரி பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுதாக்கல் செய்தன.