இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்: அரசுக்கு திமுக வர்த்தகர் அணி எச்சரிக்கை

சென்னை:  திமுக வர்த்தகர் அணி கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கடலூர் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ரமேஷ், மாநில துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன், மாநில இணை செயலாளர் ஜெயன், துணை செயலாளர்கள் வி.பி.மணி உட்பட 70 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம் வருமாறு: கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்க வேண்டும். இ-பாஸ் முறையை மத்திய அரசு வேண்டாம் என்று சொன்னாலும், வருமானத்துக்கு ஆசைப்பட்டு தொடர்வது நல்லதல்ல. கட்டுப்பாடுகளுடன் கூடிய பயணத்தை அனுமதிப்பது லஞ்சத்தை ஒழிக்கும். எனவே இ-பாசை இதை ரத்து செய்யாவிட்டால் திமுக வர்த்தகர் அணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

வரி விதிப்பு கூடாது. மும்மொழிக் கல்விக் கொள்கையை அதிமுக அரசு எதிர்க்க வலியுறுத்துகிறோம். கொரோனா நலத்திட்டத்தில் வர்த்தகர் அணி அர்ப்பணித்துக் கொண்டு இதுவரை ஒரு லட்சத்து 70ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உதவி நிர்வாகிகளுக்கு நன்றி. தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலினை ஆக்க 2021 தேர்தலுக்கு உழைத்திடுவோம். கொள்கை மாற்றம் ஏற்பட்டவுடன் தொல்,திருமாவளவன், பழ.கருப்பையா, திருநாவுக்கரசர் ஆகியோர் பதவியை வீசிவிட்டுத்தான் மாறினார்கள். தனித்து நின்று கவுன்சிலர் கூட ஆக முடியாத செல்வம், எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்துவிட்டு செல்வதுதான் அழகு என்று எச்சரிக்கிறோம் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: