சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பதில் இருமொழிக் கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கையை அனுமதிக்காது என தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும் தமிழ்நாடு அரசு இருமொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என அறிவித்திருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூறியுள்ள மற்ற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்று, அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றி அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.