இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20,00,000: உலகளவில் 2ம் இடத்தை பிடிக்க படுவேகம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 20 லட்சத்தை கடந்தது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாளுக்கு மின்னல் வேகத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் பாதித்தோர், குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகிதம், எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு வெளியிட்டு வருகிறது. இதன்படி, நேற்று காலை 8 மணிக்கு அது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 56,282 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 64 ஆயிரத்து 536 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 8வது நாளாக தினமும் 50 ஆயிரம் பேர் வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 904 பேர் வைரசுக்கு பலியானதால், மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,699 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 5 லட்சத்து 95 ஆயிரத்து 501 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை பெற்று வருவதால், வைரஸ் பாதிப்பு சதவீதம் 30.31 ஆக குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் 2.07 சதவீதமாக இருக்கிறது. குணமானவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அறிக்கையின்படி, கடந்த புதன்கிழமை சேகரிக்கப்பட்ட 6 லட்சத்து 64 ஆயிரத்து 949 மாதிரிகளுடன், கடந்த 5ம் தேதி வரையில் 2 கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 351 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 20 லட்சத்தை கடந்தது. இதன் மூலம், உலகளவில் 28 லட்சத்து 59 ஆயிரம் பாதிப்புடன் 2வது இடத்தில் உள்ள பிரேசிலை இந்தியா வேகமாக நெருங்கி வருகிறது.

* மாநிலங்களுக்கு ரூ.890 கோடி

கொரோனா சிகிச்சை, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த மார்ச் 24ம் தேதி ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, அவசரகால தேவை மற்றும் சுகாதார ஆயத்த நிலை தேவைக்காக மத்திய அரசு முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் மாநிலங்களுக்கு ரூ.3,000 கோடி வழங்கியது. இந்நிலையில், 2வது நிதி தொகுப்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களுக்கு நேற்று ரூ.890.32 கோடியை வழங்கியது.

Related Stories: